அன்று, “இன்ன இடங்களில் தான் கட்டிடம் கட்ட வேண்டும்” என்கிற நியதிகளை மக்கள் கடைபிடித்தனர். இன்று காலச் சூழல், மக்கள் பெருக்கம், அதனால் உண்டாகிற இடங்களின் நெருக்கடி போன்ற பல காரணங்களால், கண்ட கண்ட இடங்களில் எல்லாம் கட்டிடம் கட்டுகின்றனர். நீண்ட நெடுங்காலம் ஆக அங்கு குளம் இருக்கும். குளம் போதிய பராமரிப்பு இல்லாததால், காலப்போக்கில் நீர் பெருக்கமும் குறைந்து பாழடைந்துவிடும்.
பின் குளத்தில் மண்ணைக் கொண்டு வந்து
கொட்டி சமன்படுத்துவார்கள். மனையாகப் பிரித்தும் விற்பார்கள். மனை விற்கிற வியாபாரிகள்,
அக்குளத்தில் நல்ல மண்ணையாவது கொட்டினார்களா? அவர்களுக்கு அது பற்றியக் கவலை
சிறிதளவும் இல்லை. வழையக் கட்டிடம் இடித்த மண் எனில் கூட பரவாயில்லை. குப்பைமண்,
மக்கித் துர்நாற்றம் வீசுகின்ற மண், நாறுகிற மண் – இவைகளை எல்லாம் கொண்டு வந்து
கொட்டுகிறார்கள்.
ஓர் அரசு மருத்துவமனை, மனையின் பின்புறத்தில் ஒர் அகண்ட நீண்ட நீரோடை,
மருத்துவ மனையின் கழிவுகள், குப்பை கூழங்களால் ஓடை நீரை அடைத்தது. துர்நாற்றம்
மருத்துவமனையை வலம் வர, ஓடையை சுத்தம் செய்தனர்.மருத்துவமனையின் கழிவுகள், குப்பை
மண், சேரும் – சகதியுமாய் உள்ள மண்ணை குளத்தில் கொட்டினர். குளமோ துர்நாற்றம்
வீசியது. நல்ல மனித மனங்கள் ஏசின – பேசின.
ஆக, ஒரு வழியாக குளம் சமன் ஆனது. சில
வாரங்களில் அதை மனைகள் ஆகப் பிரித்தனர். சில மாதங்களில் அதில் கட்டிடங்கள்
கட்டினர். சமன் ஆனக் குளத்தினுள் ‘சல்லியம்’
கிடைக்குமே? அது பற்றிய
கவலைகள் விற்றவர் – வாங்கியவர் இருவருக்கும் துளியும் இல்லை. காரணம் அவர்களுக்கு
‘சல்லியம்’ பற்றிய அனுபவம் இல்லை. “சல்லியம் பற்றிய
விழிப்பு உணர்வை நாம் உணர்த்த வேண்டும்.
நீண்ட நெடுங்காலமாக எனக்குத் தெரிந்த ஓரிடம். அந்த இடமோ ஒரு மயான பூமி. அது
“மயான பூமி” தான் என்பது அவ்வூர் மக்களும் நன்கு
அறிவர். காலப்போக்கில் ஊரும் விரிவு ஆயிற்று. மயானத்தை அரசு வேறு இடத்திற்கு
மாற்றியது. மயான பூமி ஏலத்திற்கு வந்தது. இடத்தை வாங்கிய மனை வியாபாரி, அதை
மனையாகப் பிரித்து விற்றார். வியாபாரமோ படுஜோராக நடந்தது – முடிந்தது.
வாங்குவோர் பலரைத் தடுத்தேன். அதில் ஒரு
சிலர்தான் கேட்டனர். மயான நிலத்தில் எலும்புகள் புதையுண்டு கிடக்கும். மேலும்
பிணங்களை எரித்த சாம்பலும் பரவிக் கிடக்கும். மயான நிலத்தில் எத்தனையோ பேர் வயிற்றிலும்
வாயிலும் அடித்துக் கொண்டு அழுது புலம்பிய அழுகுரலின் வேல ஒலிகள் போன்றவை
அங்குதான் அலையும். இதை நம்பாதவர்கள் கூட காலப்போக்கில் நம்பத் தொடங்கினார்கள்.
நம் இன்ப – துன்பங்களுக்கு எல்லாம் ‘சல்லிய தோஷம்’ – தான் முதற்காரணம் என்பதை பண்டைய வாஸ்து நுல்கள் பெரிதும்
வலியுறுத்துகின்றன. நாம் நல்ல – சிறந்த இடம்தான் என்று அறிந்து வாங்கினாலும்,
அதிலும் ஒன்றிரண்டு சல்லியங்கள் புதையுண்டு கிடக்கலாம். அதை எல்லாம் கூர்ந்து
கவனித்து, சல்லியத்தை வெளியேற்றிய பின், நாம் வீடு கட்டினால் தான் “வசந்த காலம்” நம்மை வரவேற்கும்.
சல்லியம் என்றால் என்ன? ‘சலக்கா’ என்னும் வடமொழிச் சொல்லில் இருந்து, ‘சல்யம்’ என்ற சொல் மருவியது. சிறுகுச்சி, முள், அம்பு, விரல்
எலும்பு, மரத்துண்டு, இரும்புத்துண்டு, தானியம் இவைகளைக் குறிக்கிற சொல்லே ‘சல்யம்’ என்ற பொருளில் வடமொழி அகராதிக் குறிப்பிடுகிறது. ஆக வடமொழி
சொல்லான ‘சல்யம்’ தமிழில் சல்லியம் என ஆனது.
‘சல்லியம்’ என்ற சொல்லுக்கு வேண்டாத,
விரும்பப்படாத, துன்பந்தருகிற என்னும் பொருள்படும். பூமியில் வேண்டாத,
விரும்பப்படாத பொருட்களை அகற்றி விட வேண்டும். அப்படி அகற்றவில்லை எனில்,
அவைகளினால் அந்த இடத்தில் கட்டிடம் கட்டியவருக்கு துன்பங்கள் ஏற்படும். கட்டிடம்
கட்டும் முன்பே சல்லியம் கண்டறியப்பட வேண்டும். மனை விற்பவரும் ‘சல்லியம்’ பார்த்து, பின் மனை விற்க வேண்டும்.
பூமியில் சல்லியங்களை வெளியே
எடுப்பதுதான் சிறந்த முதற்பரிஹாரம். வாஸ்து நுல்களில் 16 வகையானப் பொருட்களைச் சல்லியம்
என்று பெயரிட்டனர், அவை 1. எலும்பு, 2. தலையின் மண்டை, 3. செங்கல், 4. மண் ஓடு, 5.
அடுப்பு, 6. சிலை, 7. சாம்பல், 8. கரி, 9. பணம், 10. தானியம், 11. பொன், 12. கல்,
13. தேரை, 14. விலங்கின் கொம்பு,15. நாய் எலும்பு, 16. ஜாடி
அரணை, தவளை, சிலந்தி, புழு, நண்டு, பசுவின் கொம்பு, செங்கல், தான்யம்,
சிப்பி, தங்கம், ஈயம், பித்தளை போன்றவை நிலத்தை தோண்டும் போது கிடைத்தால், அதனால்
அதிகமானத் தீமைகள் இல்லை. ஆனாலும் இவைகளை முற்றிலுமாகவே வெளியே எடுத்துவிட
வேணடும். புதையுண்டு கிடந்த, உடைந்த செங்கற்களை மீண்டும் கட்டிடம் கட்ட
பயன்படுத்தக் கூடாது, தங்கம், வெள்ளி, ஈயம், பித்தளை இவைகளைத் தோண்டி எடுத்தால்
‘தானம்’ தந்து விடவும்.
சிதிலமான மண் ஓடுகள், சாம்பல்,
கரித்துண்டுகள், கரையான், பல், மரத்தின் வேர், வண்டு, ஓணான், உடும்பு, பாம்பு,
தேள், சூலம் மற்றும் ஆயுதங்கள், எலி, விறகு, எறும்புகள், தேன் கூடு, ஆமை, முட்டை,
நகம், மயிர் போன்றவைகள் நிலத்தை தோண்டும் போது கிடந்தால், அதில் தீமைகள் தான்
அதிகம் ஆகும்,. ஆகவே இவைகளைத் தேடிப் பார்த்து முற்றிலும் அகற்ற வேண்டும். “வேண்டாம்” என்று யார் சொன்னாலும் கேட்கக் கூடாது.
மேலும் மரவேர் மண்ணில் மறைந்து கிடக்கும், மரவேரைக் கவனிக்காமல் பலர்
அலட்சியமாக ‘கடைக்கால்’ பணியைத் தொடங்குவர். சில மர வேர்கள்
மீண்டும் வளர்கிற தன்மை கொண்டவை. அவை வளர்ந்து, பின் கட்டிட அஸ்திவாரத்தையே
அசைத்து பார்த்து விடும். அஸ்திவாரம் பலம் இழந்தால் அழகான கட்டிடமும்
ஆட்டங்காணும். கட்டிடச் சுவர்களில் விரிசல்கள் விரியலாம். பின் கட்டிடம் சரியலாம்.
மேலும், கற்கள், கண்ணாடித் துண்டுகள்,
தாயத்துகள், உடைந்த பீங்கான் ஓடுகள், பாலித்தீன் பொருட்கள், பழுதான இயந்திரப்
பகுதிகள், துருபிடித்த இரும்புக் கருவிகள், நைந்த துணிகள், ஒலியை எதிரொலிக்கும்
உருக்கு கற்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை தோண்டுகிற போது கிடைந்தால் இவைகளை
எடுத்துவிட வேண்டும்.
நிலத்தில் எடுத்த கற்களை மட்டும்,
நிலத்திற்கு தெற்கு – மேற்குப் பகுதியில் கொட்டவும். எடுத்தக் கற்களைக் கட்டிடம்
கட்ட மீண்டும் பயன்படுத்தலாம். எடுத்தக் கல்லை மீண்டும் பயன்படுத்துவதால் நமக்கு
தோஷம் ஏதும் இல்லை.