Type Here to Get Search Results !

Ads

புண்ட்ர தாரணம் தொடர் - 3

அகற்பம்
         மேல் சொன்னவைகளை மந்திரங்கள் சொல்லாமல் உண்டாக்குவது அகற்பமென்பதாகும்.
சிதா பஸ்மம்
       இது தவிர இறந்து போன மஹான்களின் உடல் எரியூட்டப்பட்ட பின்னர் அவர்களது சிதையிலிருந்து எடுத்த பஸ்மம் அணியத்தக்கது என சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.
         சிவ பெருமானே காமனை தனது கோபக்கண்ணால் எரித்ததற்கு பின்னால் அவனது எலும்புச் சாம்பலைத் தனது உடல் முழுவதும் பூசிக் கொண்டதாகவும், அதன் பின்னரே அவரது கோபம் தணிந்தது எனவும் கூறுவர்.
         ‘த்ருவம் சிதாபஸ்மரஜோ விசுத்தாயே’ என்ற வாக்கின் மூலம் சிதாபஸ்மம் உடலைத் தூய்மைப்படுத்த வல்லது என்பது நிரூபணமாகிறது.
         ஆனாலும் கூட சில வாமாசார சைவ சம்ப்ரதாயங்களான தாந்தரீகம் காபாலிகம் முதலியவற்றைத் தவிர சிதாபஸ்ம தாரணம் யாராலும் உயர்ந்ததாகக் கருதப்படவில்லை.
         பசுஞ்சாணத்திலிருந்து மேலே சொன்ன முறைகளிலேயே பஸ்மம் தயார் செய்ய வேண்டும்.
         “பசுக்களை பாசத்திலிருந்து விடுவிக்கும் பதியான பசுபதியை எப்படி அடைவது?” என்ற கேள்விக்கு “பஸ்மத்தை சரீரத்தில் தரப்பதின் மூலமாக” என்று விடையளிக்கிறது ஜாபால உபநிஷத்.
விபூதிக்கு பயன்படாத சாணம்
        கன்று ஈன்ற பத்து நாட்களுக்குட்பட்டு ஆசௌசம் நீங்காததும், இரண்டு கன்றுகள் ஈன்றதும், முதிர்ந்த கன்றுடையதும், நோய்வாய்ப்பட்டதும், மலட்டுத் தன்மை உள்ளதும், கிழத்தன்மையுள்ளதும், கர்ப்பமுற்றதும், கன்று இறந்ததும், வால், காது, கொம்புகள் ஆகியவை பின்னமானதும், மலம், சுவரொட்டிகள் ஆகியவை தின்கிறதும் போன்ற பசுக்களின் சாணம் வபூதிக்கு ஏற்றதல்ல.
வெண்ணிற விபூதி
        கருநிற விபூதி வியாதியை உண்டாக்கும், செந்நிற விபூதி கீர்த்தியையும், புகை நிற விபூதி ஆயுளையும், பொன்நிற விபூதி மோக்ஷத்தையும், வெண்ணிற விபூதி நனமையையும் தரும்.
விபூதி அணியும் முறை
        திருநீற்றை உத்தூளனமாகவும் (திருநீற்றை தண்ணீரில் குழைக்காமல்பூசுதல்) திருபுண்ட்ரமாகவும் தரித்துக் கொள்ளுதல் வேண்டும்.
        வடக்கு முகமாகவோ, கிழக்கு முகமாகவோ நோக்கி நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து “ சிவ சிவ ” என்று சொல்லிக் கொண்டு வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியிலே தரித்தல் வேண்டும்.
         விபூதி நிலத்தில் சிந்தினால் சிந்திய விபூதியை எடுத்துவிட்டு அந்த இடத்தை சுத்தம் செய்தல் வேண்டும். நடந்து கொண்டோ, படுத்து கொண்டோ விபூதியை தரித்தல் கூடாது.
          உறங்கி எழுந்த உடனும், பல்விளக்கி முகம் கழுவியயுடனும், காலை மற்றும் மாலை வேளைகளிலும், குளித்த உடனும், ஆலய வழிபாட்டிற்கு முன்னும், பின்னும், சாப்பாட்டிற்கு முன்னும், பின்னும், உறங்கச் செல்லும் போதும் விபூதி அணிதல் வேண்டும்.
த்ரிபுண்ட்ர தாரணம்
           த்ரிபுண்ட்ரம் என்பது நீரில் குழைத்து விபூதியை சிரம், நெற்றி, மார்பு, தொப்புள், முழந்தாள்கள், புயங்கள், முழங்கைகள், மணிக்கட்டுகள், விலாப்புறம், முதுகு, கழுத்து என்னும் பதினாறு உறுப்புகளிலும் மூன்று பட்டையாக இடுவது.
           இவைகளுள் விலாப்புறம் இரண்டையும் நீக்கி காதுகள் இரண்டையும் கொள்வதும் உண்டு. முழங்கைகளையும், மணிக்கட்டுகளையும் நீக்கி பன்னிரண்டு ஸ்தானங்களில் கொள்வதும் உண்டு.
           நெற்றியில் இரண்டு கடைப்புருவ எல்லைவரையும் தரித்தல் வேண்டும். அதில் கூடினாலும், குறைந்தாலும் குற்றமாகும்.
           மார்பிலும், புயங்களிலும் ஆறு அங்குல நீளத்தில் தரித்தல் வேண்டும். மற்றைய உறுப்புகளில் ஒவ்வோர் அங்குல நீளத்தில் தரித்தல் வேண்டும்.
           மூன்று வரிகளின் இடைவெளி ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்னையொன்று தீண்டல் ஆகாது.
           ஆண்டு முழுவதற்கும் தேவையான திருநீற்றை ஆண்டுக்கு ஒருமுறை மஹாசிவராத்திரியன்று தயாரித்து வைத்துக் கொள்வது அவசியம்.

           விபூதியைப் புதுத்துணியில் சலித்து, வடிகட்டி, நறுமலரிட்டு, புதிய பாத்திரங்களில் வைத்து, காயத்ரி மந்திரம் சொல்லி, மலர் சாத்தி, பூஜித்து, வெள்யை வஸ்திரத்தினால் வேடு கட்டி வைக்க வேண்டும். இதிலிருந்து அவ்வப்போது அவசியத்திற்கு தக்கபடி பட்டுப்பை மற்றும் சம்புடத்தில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
புண்ட்ர தாரணம் தொடர் - 3