முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாகத் திகழ்வது பழனி. இங்கு முருகன் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்தில் உள்ள பழனியாண்டவர் திருமேனி போகர் சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால் மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்கிறார்கள்.
பழனி என்பது அங்குள்ள மலையின் பெயராகும். பழனி மலையையும், மலையடி வாரத்தில் உள்ள திருவிழாவினன்குடி தலத்தையும் உள்ளிட்ட நகரமே பழனி என்று அழைக்கப்படுகிறது. இத்தலம் பழனி என அழைக்கப்படுவதற்கு காரணமும் உள்ளது.
சிவனும், பார்வதியும் தம் இளைய மைந்தனான முருகப் பெருமானை “ஞானப்பழம் நீ” என அழைத்ததால் “பழம் நீ” என வழங்கப்பெற்று அதுவே பின்னர் “பழனி” என மருவிவிட்டது.
ஆனந்தமயமான ஆண்டவனை அடைய வேண்டுமானால், ஆன்மாக்கள் முதலில் பற்றை ஒழிக்க வேண்டும். பற்றை ஒழித்த நிலை நீடிக்க வேண்டுமானால் மனதை இறைவனிடம் செலுத்தினால் தான் முடியும் என்பது தான் அது.